Sunday 16 December 2018

ராட்சசன்,prosthetic மற்றும் தேஜாவூ


   கச்சிதமான திரைக்கதை உள்ள முதல் தமிழ் படம் என்றெல்லாம் சில ஒலக விமர்சகர்கள் பில்டப் கொடுத்திருந்தது படம் பார்ப்பதை மேலும் தள்ளிப்போட வைத்தது.
              படம் நெடுக "இத எங்கையோ பாத்திருக்கமே" மைன்ட் வாய்ஸ் ஓடிட்டே இருந்தது.
உதாரணமா பட துவக்கத்தில் நாயகனுக்கு போலீசில் சேர பெரிதாக விருப்பமில்லை.அவனுக்கு இயக்குனர் ஆகவே விருப்பம்.அவனது மாமாவின் சிபாரிசில் எஸ்ஐ ஆகிறான்.முதல் நாள் தயங்கியபடி ஸ்டேசனுக்குள் நுழைந்தால் அங்கே ஒரு கைதியை மேலதிகாரி போட்டு துவைத்துக்கொண்டிருக்கிறார்...இவன் பயந்தபடியே பார்க்கிறான்..etc..etc..அப்புறம் ஒரு தொடர்கொலை வழக்கு பற்றிய  விசாரணை குழுவில் சேர்க்கப்படுகிறார்...நிற்க..இதெல்லாம் அஞ்சாதே படமா?ராட்சசன் படமா?என்ற முதல் குழப்பம்.
அஞ்சாதே!


       அப்புறம் அந்த பிரேத பரிசோதனை டாக்டர் நிழல்கள் ரவி பண்ணியிருக்கார்.அப்புறம் அங்கங்க மர்மமான பெட்டிகள் கண்டெடுக்கப்படுது ..நிற்க....என்னவோ யுத்தம் செய் மாதிரி..யூதாஸ்(ஜெயப்பிரகாஷ்) கேரக்டர் மாதிரி. ஆனா நிழல்கள் ரவியினது யூதாஸ் போல   metaphysical  தன்மைகள் எதுவும்  இல்லாத  கேரக்டர் !
                 இதெல்லாம் ஒரு மேட்டரா?இயக்குனர் மிஸ்கின் ரசிகனா இருந்திருக்க கூடும் என்று விட்டுட்டேன்.அப்புறம் அந்த முக்கிய காட்சி.அந்த கணக்கு வாத்தி அந்த மாணவியை மட்டும் இருக்க சொல்லிட்டு மத்தவங்களை அனுப்பிவிட்டு சில்மிஷம் செய்துகொண்டிருக்கும் அந்த வேளையில் ..அதெப்படி சொல்ல..பள்ளியில் மேஜிக் ஷோ நடப்பதாக இரண்டும் மாறி மாறி காட்டப்படுது!ஏன்?
பெண் வேடமிட்ட ஆண்!
         மேஜிக்ல முக்கியமான அம்சம் பார்வையாளனின் கவனத்தை ஒரு பொருள்/இடத்தில் குவிய செய்துவிட்டு அந்த மைக்ரோ விநாடிப்பொழுதில் மேஜிக் நிபுணர் வேறொரு வித்தையை செய்து தயாராக இருப்பார்!தயாரானதும் மக்களின் பார்வையை அந்த தயார் செய்யப்பட்ட இடம்/பொருளின் மீது கவனத்தை குவிய செய்வார்.அந்த மாதிரி இந்த இரண்டு காட்சிகள்.இங்கே இயக்குனர் மக்களின் பார்வை நிச்சயமாக படும் என்று கருதும் அந்த கணக்கு வாத்தியின் சேட்டை..அந்த நேரத்தில் பள்ளி மேஜிக் ஷோவில் அந்த வினோத தோற்றத்தில் மேஜிக் செய்துகொண்டிருக்கும் அந்த நபர்.
திசை திருப்பலுக்கு இக்காட்சி!

          இயக்குனர் நிச்சயமாக நம்பியது மக்களின் கவனம் அந்த வினோத தோற்ற நபர் மீது விழாது என்பதே!ஏனெனில் அந்த மாணவிக்கு ஒன்னும் ஆகிட கூடாதே!அந்த நேரத்தில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து விடாதா?நாயகன் கதவை உடைத்து வந்துவிட மாட்டானா?என்று தவித்துக்கொண்டிருப்பர். அப்ப போய் "என்னாதிது?வினோதமா ஒரு நபர் மேஜிக் பண்ணிட்டு இருக்குது?" என்ற சந்தேகமே எழுந்திருக்காது.

    ஆனா நான் அதை கவனிக்க நேர்ந்தது.கண்டிப்பாக அதை வேறு சிலரும் கவனித்திருக்க கூடும் என்றாலும் அவர்களுக்கு இங்க மறுபடியும் ஒரு தேஜாவூ வந்திருக்காது.இங்கே strike ஆனது ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதிய அலெக்ஸ் க்ராஸ் சீரிஸ்.அலெக்ஸ் க்ராஸ் எனும் ஆப்ரிக்க அமெரிக்க டிடெக்டிவ் -தன் தாய் மற்றும் மகளோடு வசித்துவருகிறார்.மனைவி இறந்து பல வருடங்கள் ஆனாலும் மறுமணம் புரியாதவர்.மகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை மீது அவருக்கொரு ரொமாண்டிக் பந்தம் ஏற்படுது...நிப்பாட்டு.இங்கயும் நாயகனுக்கு தன் மகள் இல்லாட்டாலும் மாமா பொண்ணு படிக்கும் அந்த பள்ளியின் ஆசிரியை மீது லவ்வு.சரி இதை விட்டுடுவோம்.முக்கியமான மேட்டருக்கு வருவோம்.
        முன்ன சொன்ன அந்த வினோத உருவம் பார்த்ததும் எனக்கு Along came a spider(அலெக்ஸ் க்ராஸ் வரிசையில் முதல் நாவல்.)திரைப்படமாக மார்கன் ப்ரீமேன் நடித்து வந்தது.அதுல கேரி சோனிஜி என்று வினோத உருவம் கொண்ட ஒரு ஆசிரியர்.
Gary Soneji

பின்னர்தான் தெரியுது.அந்த நபரின் உண்மை பெயரும் அதுவல்ல.தோற்றமும் உண்மையல்ல.செனேடரின் மகள் படிக்கும் பள்ளியில் தீவிர கண்காணிப்பில் அவள் இருக்கும்போதே அவளை பள்ளியில் இருந்து கடத்தி சென்றுவிடுவான்.

மேக்கப் கலைத்த கேரி சோனிஜி  &கிறிஸ்டபர் 


                   அதன் பின் அந்தக்கதை வேறெங்கோ திசைமாறி போய்டும் என்றாலும் இப்படம் அதை நினைவுபடுத்தியது.
அப்புறம் படத்தின் பிற்பகுதியில் கிறிஸ்டபர் பெண் வேடம் கலைத்துவிட்டு ஆணாகவே வரும் காட்சிகள்  பலவற்றில் படத்தில்   வியாதியால் பாதிப்புற்ற லிங்கேசனை நினைவூட்டுகிறார்!
யாரு லிங்கேசன் ?யாரு கிறிஸ்டபர்?
           
                    அப்புறம் ஒரு வில்லன் அதுவும் சைக்கோவான வில்லன் என்றாலே உடனே அந்த நபருக்கொரு பிளேஷ்பேக் போட்டு எப்படி இருந்த இந்தாளு இப்படி ஆகிட்டாரு?என்று பார்வையாளர்களை உச்சுகொட்ட வச்சிட்டு கடைசில அதே நபர் ஈரோ கையால் சாகும்போது கைதட்ட வைத்தல்.ராட்சசன் மட்டுமல்ல 2.0 ல கூட அதான் நடந்துச்சு.
z             உண்மையில் எதுக்கு இந்தமாதிரி  பிளேஷ்பேக் ?இதை தெரிஞ்சிக்கிட்டு குற்றம் செய்வோரின் psychological profile உருவாக்கி அதை வச்சு வேற படங்களின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போறோமா?விறுவிறுப்பான படங்களுக்கு அது தேவையில்லை என்பது என் கருத்து.இதுமாதிரியான உளவியல் தன்மைகளை மட்டும்  மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு அவை தேவைப்படும்.
              மற்றபடி இதுவொரு நல்ல வணிக சினிமா.மேற்சொன்ன தேஜாவூ உணர்வுகள் தோன்றாமல் இருந்திருந்தால் படத்தை ரசித்திருக்க முடியும்.மற்றவர்களுக்கு அம்மாதிரியான உணர்வுகள் இல்லை  என்பதை படம் குறித்த அவரவர் பதிவுகளை பார்த்தப்போ புரிஞ்சிது.
              இங்க குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் prosthetic.கிறிஸ்டபர் கேரக்டருக்கு மேக்கப் பண்ண எவ்வளவு மெனக்கேட்டோம்...எவ்வளவு மணி நேரங்கள் ஆனது..etc...etc.. மாதிரியான தகவல்கள்.முன்பே Synecdoche New York பதிவில் prosthetic பற்றி குறிப்பிட்டிருந்தேன்.குறிப்பாக கமலால் ப்ரோஸ்தட்டிக்

என்றாலே ஒருவித ஒவ்வாமை வந்துவிட்டதை குறிப்பிட்டிருந்தேன்.அதையே இங்கும் சொல்ல வேண்டியுள்ளது.
       குறிப்பாக இந்த படத்தின் ஓட்டத்திலிருந்து விலகி அலெக்ஸ் க்ராஸ் சீரிசுக்கு குறிப்பா Along Came a Spider படத்துக்கு கவனம் சென்றதற்கு காரணமும் வில்லன் அணிந்திருந்த ப்ரோஸ்தட்டிக்  மேக்கப்தான். இந்த prosthetic அணிந்த முகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட எனக்கு ஒன்றாகவே தெரிகிறது.
 உதாரணமாக Sin City படத்தின் Marv  கேரக்டரின் முகமும் தசாவதாரம் பிளெட்சர் கேரக்டர் முகமும் ஒன்றாகவே இருப்பதை கவனிக்கலாம்(தசாவதாரம் படத்தில் ப்ரொஸ்தடிக் அணிந்த எல்லா   கேரக்டருமே  ஒரேமாதியான முகபாவம் கொண்டதாகவே தோன்றியது)
Fletcher and Marv

அதுபோல சீதக்காதி விசய் சேதுபதி முகம் இந்தியன்  கமல் முகம் போலவே(அவ்வை ஷண்முகியையும் சேர்க்கலாம்)!அது ப்ரொஸ்தடிக் மேக்கப்புக்கே உண்டான limitation என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடியுது.

       இந்த படத்தில் அந்த மேஜிக் செய்யும் அந்த "பெண்"னை பார்த்ததும் முதலில் ரெமோ பட நர்ஸ் நினைவுக்கு வந்தது :D .அப்போதே அது பெண்ணல்ல பெண் வேடமிட்ட ஆண் என்று விளங்கி இவன்தான் கொலைகாரன் என்பதையும் யூகிக்க முடிந்துவிட்டது(பின்ன எதுக்காக ஒருத்தன் மெனக்கெட்டு பெண் வேடம் போட்டுகினு இங்க மேஜிக் பண்ணுறானாம்?).அதுவே அந்த மேஜிக் செய்யும் கேரக்டரின் பின்புறத்தில் இருந்து கேமரா கோணத்தை வைத்திருந்தால்  அதாவது ஒரு பெண்ணின் உருவம் மட்டும் தெரியும்படி காட்டியிருந்தால் அந்த யூகத்துக்கு  இடமில்லாமல் போயிருக்கும்.
.

   டிஸ்கி:          "மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?" என்று சிலர் கேட்கலாம். ஒரு படம் பார்க்கும்போது தோன்றும் உணர்வுகளை எண்ணங்களை எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்வதே நம்ம வழக்கம்.வெளியில் இருந்து பார்க்கும் பார்வைகள் மாறுபடலாம்!
                சினிமா விமர்சனம் என்ற வார்த்தையை எங்குமே நான் பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணமும் இதுவே!விமர்சனம் என்று வரும்போது தனிப்பட்ட நபரின் எண்ணங்களை மட்டும் பதிவு செய்ய முடியாது.பொதுப்படையான மக்களின் சிந்தனை ஓட்டத்தை கருத்தில் கொண்டே எழுத முடியும்.அது நமக்கு வராது!

Thursday 22 November 2018

பரியேறும் பெருமாள்

                        இந்தப்படத்தை தாமதமாக பார்க்க காரணம் ஒலக விமர்சகர்கள்!அவர்கள் எந்த ஒரு படத்தையும்  ஆகா!ஓகோ என்றாலே கொஞ்சம் உசாராகி 'சரி படத்த அப்புறம் பாத்துக்கலாம்!' என்று ஒத்திப்போடுவதே வழக்கம்!
        படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாது வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை காண முடிகிறது.இந்தப்படம் வெற்றி பெறவும் ரஞ்சித் இயக்கிய கடந்த இரண்டு படங்கள் ரசினி நடித்திருந்தபோதும் பெரிய வெற்றியை பெறாததன் காரணத்தையும்  பிறகு பார்க்கலாம்.

      சாதிய ஒடுக்குமுறை சாதி ஆணவ படுகொலைகள் என்பது வட இந்தியாவை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே இருந்தது(இருக்கிறது என்றே நினைக்கிறன்).ஆனா சமீப காலமா இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன.பல்வேறு சாதிய இயக்கங்கள் கட்சிகள் தமிழன் என்ற முகமூடி அணிந்து பின்னே செய்யும் தகிடுதத்தங்கள் ஒருபுறம் இருக்க இப்போதுள்ள இளைய தலைமுறையில் பலரும் பெயருக்கு பின்னாடி சாதி பேரை போடுவதை ஒரு பேஷனாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் சென்ற தலைமுறையை விட சாதிய பிரக்ஞை கூடுதலாக உள்ளவர்களாக இருப்பதகாவே தோன்றுகிறது.
          சமூக வலைதள ஊடகங்களில் காணப்படும் சாதிவெறி பதிவுகள்- எதிர்வினைகள்; தன் சாதியை சார்ந்தவன் என்ற ஒரே காரணத்துக்காக சில நடிகர்களை தலைமேல் தூக்கிவைத்து ஆடுதல்,சினிமாக்காரனை கூத்தாடி என்று விமர்சிக்கும் இவர்களே 'தன் சாதி நடிகன்' படத்தை DP யாக வைத்துக்கொள்ளும் நகைமுரணையும் காண முடிகிறது.
       ஆணவ படுகொலைக்கான ஆணிவேர் உடலில் இருக்கிறது.உயர்ந்த சாதி ஆண்ட பரம்பரை என்றெல்லாம் உசுப்பிவிடப்பட்ட மக்கள் தங்கள் வீட்டு மகள்களை(கவனிக்க மகள்கள் தான் பிரதானம்) ஒரு சுய சிந்தனை கொண்ட பெண்ணாக பார்க்காமல் தன் குடும்ப-சாதி பெருமையை காப்பாற்றப்போகும் தன் சாதிக்கு வாரிசுகளை தரப்போகும் ஒரு புனித உருவாகவே பார்க்கப்படுகிறாள்.இது மதங்களின் மீது தீவிர பற்று கொண்டோருக்கும் பொருந்தும்.
           அத்தகைய புனித உருவை தன் சாதி ஆண்மகன் கையில் பிடித்துக்கொடுப்பதன் மூலம்   கலப்படமே இல்லாத 100% தன்- சாதியை சார்ந்த - pure bred வாரிசுகளை பெற்றெடுக்க வைப்பதே அவர்கள் லட்சியம்!அப்படியல்லாமல் வேறு சாதி அதிலும் தன் சாதியை விட தாழ்ந்த சாதியை சார்ந்த ஒருவனை இவள் காதலித்தாள்/திருமணம் செய்துகொண்டாள் என்றால் அவள் களங்கப்பட்டுவிட்டாள்!இனி அவள் தனது வாரிசே இல்லை!என்று கைகழுவுவதோடு நிற்காமல் அவர்கள் இருவரையும் போட்டு தள்ளவும் ஏற்பாடு செய்ய தயங்குவதில்லை.
        சில நேரங்களில் கூலிப்படை மூலம் அல்லாது பெற்ற தந்தையே கலப்பு மணம் புரிந்த மகளின் கழுத்தை வெட்டிட்டு நெஞ்சை நிமிர்த்திட்டு தனியாகவோ மனைவியுடனோ சரணடையும் செய்திகளை பார்த்திருப்போம்!
       இப்படத்தில் அதைவிட நுட்பமாக அந்த கிழவன் பேருந்தில் புட்போர்டு அடிப்பது போல நின்றுகொண்டு தன் சாதி பெண்ணை காதலித்த அந்த  தலித்  இளைஞனை நாசூக்காக கை நழுவ வைத்து கொலை செய்தல்,ஆற்றில் ஒரு இளைஞனை மூழ்கடித்து விபத்தில் இறந்ததாக நிறுவுதல் என்று செல்லும் காட்சிகளை குறிப்பிடலாம்!அடுத்தநாள் செய்தியில் வாலிபர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து சாவு!நீரில் மூழ்கி சாவு என்று முடிந்து விடுவதாக வசனமே இல்லாமல் மிக வலிமையாக அதை பதிவு செய்துள்ளார் இயக்குனர்!
                அப்புறம் ஜோ மற்றும் ஆனந்த் கதாபாத்திரங்கள் ஒரே சாதியை சார்ந்தவர்கள் .ஆனால்  பரியனோடு நட்பாக இருப்பதில் அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.ஜோவை லூசுப்பொண்ணு கேரக்டர் என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட முடியாது.அவளுக்கு சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிய பிரக்ஞையே இல்லை என்று சொல்லலாம்!ஒருவேளை ஜோவும் தீவிர போராளி போல கட்டி எல்லோரும் கடுமையாக தத்துவ விசாரணை செய்வதாக காட்சிகள் வைத்திருந்தால் இப்படம் கலைப்படமாகி பத்து பேரு பாத்து பாராட்டியதோடு முடிந்திருக்கும்!

       ஆக அந்த சமரசம் என்பதை பெரிய குறையாக பார்க்க தேவையில்லை.ஆனால் ஆனந்த் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து அறிந்தவனாக இருக்கிறான்.அதே நேரத்தில் பரியனோடு சாதி வித்தியாசம் பார்க்காமல் பழகுகிறான்.இடைநிலை சாதியினர் எல்லோருமே  சாதி வெறியர்கள் என்று காட்டாமல் இப்படிப்பட்டவர்களும் உள்ளார்கள் என்பதை இயக்குனர் காட்டியது கூடுதல் பலம்.வெறுமனே கருப்பு-வெள்ளை க்குள் சிக்கிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்.


         அதேநேரம் ஜோவின் தந்தை.மகளின் திருமணத்திற்கு வந்த பரியனை தனியறைக்கு கூட்டிக்கொண்டு போய் அவனை தன் சாதிக்கார வெறியன்கள் அடித்து நொறுக்கியதும்  "உன்ன கொல்றதோட இல்லாம என்னோட புள்ளையையும் கொன்னுடுவாங்கடா!உன்னை கையெடுத்து கும்பிடுறேன்டா!" என்று கெஞ்சும் போது- தான் இதை இயல்பாக எடுத்துக்கொண்டாலும் தன்னை மீறிய தனது சாதிக்காரன் விடமாட்டான் என்று சொல்ல வருவதாக விளங்குது.ஆனா படத்தின் கடைசி காட்சியில்  ஜோவின் தந்தை தான் செய்த தவறுகளுக்கு வருந்துவதால் மட்டுமே  இந்த கொடுமை  முடிவுக்கு வந்துவிடாது என்பதையும் நாம் உணரலாம்!
           அதே போல பரியனின் தந்தையை அம்மணமாக்கி உண்மையில் அவர் ஆணா?என்று பார்க்கும் அந்த தருணத்தில் சாதிவெறி மட்டுமல்லாது இன்னொரு பொதுபுத்தியையும் காண முடிகிறது. நாம் காணும் மனிதர்களை வெளிப்புற தோற்றம் சார்ந்து எடை போடுதல்.அதாவது ஆண் என்பவன் தோற்றத்தில் 100% ஆணாக இருக்க வேண்டும்.கொஞ்சம் பெண் தன்மை உள்ளவனாக இருந்தால் அவன் எதிர்கொள்ளும் கேலி கிண்டல்களுக்கு அளவே இல்லை.அதிலும் ஆண் என்பவன் கட்டையான ஆண் குரலோடு இருக்க வேண்டும்.
    பெண் குரல் கொண்ட ஆணும், ஆண் குரல் கொண்ட பெண்ணும் இருந்தாலும் இதில் கேலிக்குள்ளாவது பெண் குரல் கொண்ட ஆண்தான்!இதன் பின்னால் உள்ள உளவியல் தனிக்கதை. அப்படி அதற்கு முன்பே பலமுறை பரியனின் தந்தை அப்படி அம்மணமாக்கி அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று அவரது மனைவி சொல்வதாகவும் வருகிறது.பரியனே தனது தந்தை பற்றி சொல்ல கூச்சப்பட்டு 'அப்பா வண்டி மாடு வச்சிருக்காரு' என்று மழுப்புகிறான்.
             
       உறியடி படம் போல சாதி இயக்கத்தின் தலைவனை போட்டு தள்ளுனா எல்லாம் சரியாகிடும் என்பது மாறியான அபத்தங்கள் இப்படத்தில் இல்லை.ஆணவப்படுகொலை செய்வோர் ஒன்றும் ஸ்லீப்பர் செல் இல்லை.மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் இயங்குவதும் வராட்டி அமைதியாக இருப்பதற்கும்!இவர்களுக்கு மேலிடமும் வேண்டாம் இயக்கங்களும் வேண்டாம்!தனி மனிதனாகவே இத்தகைய கொலைகளை "சாதிப்பெருமையை தூய்மையை" நிலைநாட்டும் பொருட்டு செய்துவிட்டு ஜெயிலுக்கு போகவும் தயங்காதவர்கள்!அம்முயற்சி தோல்வியடைந்தால் தன் சாதிக்கே தான் இழுக்காக போய்விட்டதாக எண்ணி தன் உயிரை மாய்த்துக்கொள்ளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.இப்படத்தில் அந்த கிழவன் பயமில்லாது ரயிலுக்கு முன்னே போய் உக்காரும் அந்த காட்சியை சொல்லலாம்!

                கறுப்பி எனும் நாய் அது நீலமாக மாறுதல் இவையெல்லாம் மாரி செல்வராஜே வைத்தாரா இல்லை ரஞ்சித்தின் யோசனையா என்ற கேள்வி எழாமல் இல்லை.இருந்தாலும் அது கதையோட்டத்திற்கு வெளியே நிற்காமல் கதை நகர்வுக்கு பயன்பட்டுள்ளது.
         கதிர் இதற்கு முன்னாடி நடிச்ச படங்களில் "இந்த காட்சில எப்படி ரியாக்ட் பண்ணலாம்?" என்று முடிவெடுக்க முடியாத நிலையில் முழிப்பதாகவே அவரது முகபாவம் இருந்துவந்துள்ளது.இந்த படத்தில் அது இல்லை.

            ஒரு தீர்வை இறுதியில் முன்வைத்ததால் இதனை வணிக சினிமா என்றே கூறலாம்!படங்களில் கூறப்படும் நேர்மறை கருத்துக்கள் சிந்தனைகள் சமூகத்தில் எந்தவித நல்ல விளைவையும் ஏற்படுத்திவிடும் என்று நான் என்றுமே நம்பியதில்லை.இருந்தாலும் தீவிர கொள்கை, கோட்பாடு, விவாதங்கள், குறியீடுகளை வைக்கிறேன் என்று பிரதான கதையிலிருந்து பார்வையாளனின் கவனத்தை திசை திருப்பி படத்தையே டம்மியாக்கி விடுதல் வெகுசன மக்களுக்கு புரியாமல் ஏதோ ஒரு அறிவாளி elite  கள் மட்டுமே சிலாகிக்கும் படமாக அல்லாது வலிமையாக அதேநேரத்தில் விறுவிறுப்பாக்கவும் ஒரு படத்தை கொடுப்பது எளிதான காரியமல்ல!
          ரஞ்சித் தோற்ற இடம் இதுதான்!அவரின் அட்டகத்தி இன்ன்றைக்கும் எனதபிமான படம்.அதில் வடசென்னை தலித் மக்களின் வாழ்க்கையை கதையோடு பதிவு செய்திருப்பார்.அதற்கு பிறகான படங்களில் குறியீடுகளை முன்னிறுத்தி கதை ஓட்டத்தை நீர்க்க செய்துவிட்டார்!இப்படம் அடைந்திருக்கும் அந்த balance ஐ அவரும் அடைய முயலட்டும்!
         இப்போது மாரி செல்வராஜின் முன் உள்ள மிகப்பெரிய சவால் இரண்டாவது படமாகவே இருக்கும்!இதே போன்று வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் திருப்திப்படுத்தும் (ஒரு சரியான சமநிலையில்) இன்னொரு படத்தை அவர் கொடுத்தாலேயொழிய அவர் onetime wonder என்பதாக ஓரங்கட்டப்பட்டுவிடும் அபாயமும் உள்ளது.
        

Saturday 8 September 2018

Being There 1979

           

இப்படம் வெளியான காலத்தில் அன்றைய அமெரிக்க சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்திருக்கலாம்.ஆனால் இன்று இப்படம் இந்திய- குறிப்பாக- தமிழ் சமூகத்தின் அவலங்களுள் முக்கியமான ஒன்றைப்பற்றிய satire ஆக புரிந்து கொள்ளலாம்.



                         சான்ஸ்(Chance) ஆரம்ப காட்சியில் காட்டப்படும் விதம் என்பது வேறுஅதை காண்போர் அவர்தான் அந்த பெரிய வீட்டின் முதலாளி என்று எண்ணக்கூடும்.ஆனா கொஞ்ச நேரத்தில் அவர் அந்த வீட்டின் தோட்டக்காரன் என்பது தெரிய வருகிறது.படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு முதியவர்தான் வீட்டின் முதலாளி.அவருக்கு பணிவிடை செய்யும் பணிப்பெண்  லூயிஸ்(Louise)  .அவள் பரிதாபப்பட்டு சான்சுக்கு வேளாவேளைக்கு உணவளிக்கிறாள்.வீட்டின் ஒவ்வொரு அறையிலும் டிவி பெட்டிகள்.சான்ஸ்க்கு எல்லாமே டிவிதான்.தோட்ட வேலை செய்யும் இடத்தில்கூட ஒரு டிவி ஓடிக்கொண்டிருக்கிறது. 


வீட்டின் முதலாளி இறக்கும் வரை அங்கே தோட்ட வேலை செய்துவரும் சான்ஸ் பிறகு அங்கிருந்து அட்டர்னி ஒருவரால்  வெளியேற்றப்படுகிறார்.அந்த நேரத்தில் சோகமான இசையாக அல்லாமல் upbeat பின்னணி இசை ஒலிப்பதிலிருந்து தொடங்கும்  மெல்லிய முரண்பாடான  நகைச்சுவை என்பது கடைசிவரை நீடிக்கிறது.

               யாரையுமே தெரியாத நிலையில் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு சிறு கார் விபத்து.பிறகு there is no looking back என்பது போல தொடர் ஏற்றங்கள்.காரில் இருக்கும் ஈவ் ரேண்ட்(Eve Rand) சான்சுக்கு காலில் அடிபட்டிருப்பதை கண்டு இரக்கமுற்று தன் பங்களாவிற்கு அழைத்து செல்கிறாள்.அங்கு ஈவின் வயதான கணவன் பென் ரேண்ட்(Ben Rand) அவரை கவனித்துக்கொள்ள ஒரு மருத்துவர்.அவரே சான்ஸின் கால்களையும் குணப்படுத்துகிறார்.கால் குணமாக இரு நாட்கள் அவ்வீட்டில் தாங்கும் சான்ஸ் பிறகு பென் மற்றும் ஈவின் மனதில் நிரந்தர இடம் பிடிக்கிறார்.
               சான்ஸ் அப்போதுதான் நிஜ உலகை காண்கிறார்."டிவி காட்சிகள் போலத்தான் இருக்கு.என்ன இன்னும் கொஞ்சம் கூடுதலா பார்க்க முடியுது" என்று ஈவிடம் சொல்கிறார்!

           பென் பில்லியனர்.அமெரிக்க சனாதிபதிக்கே ஆலோசகராக இருப்பவர்.அமெரிக்க சனாதிபதி தனிப்பட்ட முறையில் பென்னின் பங்களாவிற்கு விஜயம் செய்யுமளவு நெருக்கம்.நீங்கள் யார்?உங்களுக்கு வீடில்லையா?என்று பென் கேட்க அதற்கு சான்ஸ் தோட்ட வேலை சார்ந்து சில பதில்களை சொல்ல பென் அவற்றை தொழில் சார்ந்த மாபெரும் தத்துவங்களாக காண்கிறார்.
     
Ben
                   என் பெயர் சான்ஸ், நான் ஒரு கார்டனர் என்று சொல்ல அவரை  சான்ஸி கார்டினர் என்பதாக அழைக்க தொடங்குகிறார்கள்.எந்த கேள்வி கேட்டாலும் சான்ஸ்  தன் மனதுக்கு தோன்றியதை அப்படியே சொல்கிறார்.அதை இவர்கள் வேறுமாதிரி அர்த்தம் செய்துகொள்ள ஒரே ரகளை!
               இங்கே பல நுட்பமான நகைச்சுவை தருணங்கள் சற்று கவனம் தவறினாலும் கண்டுகொள்ளாமல் போய்விடக்கூடும்.உதாரணமாக சான்சை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு லிப்டில் வைத்து லிப்ட் மேலே செல்லும்போது
சான்ஸ்"இதில் செல்வது இதான் முதன்முறை." என்று அவர் லிப்டை குறிப்பிட்டு இதுல டிவி இல்லையா? என்று கேட்க  பணியாளோ அவர் சக்கர நாற்காலியை சொல்வதாக நினைத்து முதலாளி ஒன்று மோட்டாரோடு வைத்திருக்கிறார் என்று சொல்ல அங்கே அந்த முரண்பட்ட புரிதலால் நகைச்சுவை மிளிர்கிறது.லிப்டில் இருக்கும்போது சான்ஸ் பயப்படுகிறார்.மணிக்கணக்கில் இப்படியே இருக்க வேண்டும்போல என்று மிரள்கிறார்.அவையும் நகைச்சுவையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
Lift scene
                   
             பென்னின் பங்களாவிற்கு வருகை தரும் அமெரிக்க சனாதிபதியிடம் பல்வேறு பருவ நிலைகள் பற்றி சான்ஸ் ஏதோ தோட்டக்கலை சார்ந்து சொல்ல அதையே வேதவாக்காக நினைத்து சனாதிபதி அதை டிவியிலும் குறிப்பிட யாரிந்த சான்ஸ்?எங்கிருந்து வந்தார்?என்று தேடல் படலம் துவங்குகிறது.பதினாறு நாடுகள் அவரின் பின்னணியை ஆராய்கிறது.டிவி சேனலுக்கு ஒரு பேட்டியும் அளிக்கிறார்.பத்திரிகைகள் அவரின் பின்னணியை அறிய படாத பாடுபடுகிறார்கள்.அமெரிக்க சனாதிபதியே தனது ரகசிய உளவாளிகள் மூலம் அவரைப்பற்றி அறிய முயல்கிறார்.
அமெரிக்க சனாதிபதி 

                 சான்ஸ் எந்த இனக்குழுவை  சார்ந்தவர் என்பதை அறிய  குரல்  பதிவுகள் கணினியில் ஆராயப்படுகின்றன.அவரின் கோட்டு சூட்டு அண்டர்வேர் வரை ஆராய்ந்து அமெரிக்க சனாதிபதிக்கு ரிப்போர்ட் அனுப்புகிறார்கள்.கோட்டு சூட்டு 1930 களில் தைக்கப்பட்டது.அண்டர்வேர்  1940 களில் செய்யப்பட்டது என்று அறிக்கை தருகிறார்கள் .முன்னாள் CIA agent  என்று FBI யும் முன்னாள் FBI agent என்று CIA வும் சொல்கிறது.CIA வுக்கும் FBI க்குமான ஏழாம் பொருத்தத்தை இக்காட்சி பகடி செய்கிறது!
         சான்ஸ் எப்போதுமே ரெண்டு இன்ச் மேக்கபுடனேயே வருகிறார்.பென்னின் பழைய கோட்டு சூட்டுக்களை அணிந்துகொள்கிறார்(கணுக்காலுக்கு மேல் பேண்ட்!).எப்போதுமே தனது இயல்பிலேயே இருக்கிறார்.சாமானிய மனிதர்கள் போல இருக்கும் சூழலுக்கு ஏற்பவோ சூழ்ந்திருக்கும் மனிதர்களுக்கு தக்கவாரோ துளியும் மாறாமல் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதையே பேசுகிறார்.அதனாலேயே அவர் அனைவராலும் விரும்பப்படுகிறார்.போலி பேச்சுக்கள் உணர்ச்சிகள் உடல்மொழிகள் இவைகளையே கண்டு சலித்த அந்த elite மனிதர்களுக்கு இவரின் சிக்கலற்ற எளிமை சொல்ல நினைத்ததை சொல்லும் துணிச்சல்(ஒரு பத்திரிக்கைகாரன் நீங்கள் உங்கள் வாழ்க்கை வரலாற்றை புத்தகமா எழுதாலமே?என்று கேட்க I cant read ...I cant write...I only watch TV என்று சொல்ல ஆமாம்  மிகப்பெரும் புள்ளிகள் யார்தான் பேப்பரோ புக்கையோ வாசிக்கிறார்கள்?என்று அவனாகவே ஒரு கற்பனை அர்த்தத்தை கொடுத்துக்கொள்கிறான்.) எல்லாம் பெரும் ஈர்ப்பையும் மரியாதையையும் பெற்று தருகிறது.
Eve

                பென்னின் மனைவி ஈவ் சான்சை விரும்புகிறார்.பென்னும் தன் மரணத்துக்கு பிறகு என் மனைவியை நீதான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.தொலைகாட்சியில் என்ன காட்சி வருகிறதோ அதற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்பவர் சான்ஸ்.யோகா பயிற்சி ஓடிக்கொண்டிருந்தால் எந்த இடம் என்றும் யோசிக்காமல் அவரும் யோகா செய்ய ஆரம்பித்துவிடுவார்!முத்தக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போது ஈவை அனைத்து முத்தம் கொடுக்க காட்சி முடிந்ததும் அவளை விட்டுவிட்டு அமைதியாக உட்கார்ந்து விடுகிறார்.அதற்குப்பின்னர் நடப்பவை அதகளம்! :D

            பென் இறந்துவிட அவரின் சவப்பெட்டியை அடக்கம் செய்ய எடுத்துசெல்லும் நபர்கள் இந்த அமெரிக்க சனாதிபதி அடுத்தமுறை வரக்கூடாது.வேறு நபரைத்தான் நாம் முன்னிருத்தணும்.பின்னணி எதுவுமே இல்லாத அல்லது மிக குறைவாக பின்னணியால் அறியப்படும் நபரே சிறந்த தேர்வு என்கிறார்கள்.அதுக்கு சான்ஸ்தான் சிறந்த நபர்.அவரின் பின்னணி என்னன்னு யாருக்குமே தெரியாது.எனவே எதிர்கட்சிகள் எதையும் கிண்டி கிளற வாய்ப்பே இல்லை என்று பேசிக்கொண்டிருக்க அந்த இறுதி சடங்கிலிருந்து விலகி சான்ஸ் ஆற்றங்கரையோரம் நடந்து செல்கிறார்...
       பிறகு ஆற்றின் குறுக்கே நடந்து பாதி ஆற்றுக்கு நடுவே நின்றபடி வியந்து தனது குடையை ஆற்றுக்குள் விட அது மிக ஆழமாக உள்ளே செல்வதாக படம் முடிகிறது.

          ஆற்றின் மேலேயே நடக்கிறார்!எனவே  இவர் அபூர்வ சக்தி கொண்டவர்!கடவுளின் தூதர் என்றெல்லாம் reading between the lines செய்ய  தேவையில்லை .அப்படி செய்வது இப்படத்திற்கும் சான்ஸ் கேரக்டருக்குமே இழுக்காக முடியும்(சில திரைப்பட ஆராய்ச்சி மாணவர்கள் அது மூழ்கியிருக்கும் pier அதன் மேல் இவர் நிற்கிறார் என்றெல்லாம் ஆராய்ந்திருக்கிறார்கள் என்று  படித்தேன்).அது அப்படிதான்!என்று எளிமையாக கடந்து செல்வதே சரியான புரிதலாக இருக்கும்!

            ஒரு சமூகம்-அதன் கலாச்சாரம்-தொலைக்காட்சியே பிரதானமாகிப்போன  அன்றாட வாழ்க்கை-ஓவர்நைட்டில் ஒரு சாமானிய நபரை டிவி மூலம் பிரபலமாக்குவது(நம்மூர்லையே அதான நடக்குது!-கும்மாங்கோ) என அனைத்தின் மீதான satire ஆக இப்படம் இருக்கு.


                  சான்ஸாக பீட்டர் செல்லர்ஸ். அவரின் தனித்தன்மை என்பது " இந்தக்காட்சியில் இப்படி நடித்து மக்களை சிரிக்க வச்சிடணும் என்றோ இப்ப நம்ம நடிப்ப பாத்து ஆடியன்ஸ் என்னமா சிரிச்சிட்டிருப்பான்" என்றோ பிரக்ஞை இல்லாது ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தீவிரத்தோடே நடிப்பவர்!அதுதான் இன்னும் கூடுதலாக  சிரிப்பை வரவைப்பது!இப்படத்தில் அனைவரும் அமெரிக்க ஆங்கிலம் பேசினாலும் இதை அமெரிக்க படமாக பார்க்க முடியாது.நகைச்சுவை பாணி என்பது ஐரோப்பிய குறிப்பாக பிரிட்டிஷ் படமாகவே இது தெரிந்தது!

Tuesday 15 May 2018

நடிகையர் திலகம்

                         தமிழ் சினிமா உலகுக்கும் தெலுங்கு சினிமா உலகுக்குமான மிகப்பெரும் வித்தியாசமாக ஒன்றை குறிப்பிடலாம்.நான் சொல்லும் தமிழ் சினிமா உலகம் கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகால கட்டத்தை சார்ந்தது.என்ன வித்தியாசம்னா தெலுங்கு படம்னா "ஆமா!இது கமர்ஷியல் படம்தாய்யா" என்று அழுத்தம் திருத்தமாகவே படமெடுப்பார்கள்.
        ஆனா சமீபகால தமிழ்ப்படங்கள் வணிக சினிமாவா?கலைப்படமா?பேரலல் சினிமாவா? என்பது படத்தை தேங்காய் உடைத்து துவக்குவது முதல் பூசணிக்கா உடைத்து முடித்து,post production, விளம்பரம் செய்து வெளியிட்ட பிறகும் இயக்குனர் துவங்கி படம் பாத்தவர் வரை  எவருக்குமே இது எந்த வகையறா?என்ற குழப்பமே மிஞ்சுகிறது .

             ஒரு கலைஞர் என்பவன் கொந்தளிப்பான மன நிலை கொண்டவர்.9-5 பக்ராக்களுக்கு அவர்களின் unexpected நடத்தைகள் புதிராகவும் அபத்தமாகவுமே தோன்றும்.அதை எதிர்கொள்ள முடியாத சில பக்ராக்கள் அவர் திமிர் பிடித்தவர்!இவர் சரக்கடிப்பவர்!அவர் எவரையுமே மதிக்க மாட்டார்!என்று சாமானியனுக்கான நடத்தை விதிகளை கலைஞன் மேல் திணித்து கீழ்மைப்படுத்தவே முயல்வார்கள்.
              அப்படியான ஒரு கலைஞரின் வாழ்க்கையை மூணு மணி நேர சினிமாவா கொடுப்பது அவ்வளவு சுலபமல்ல.மார்லன் பிராண்டோ வாழ்க்கையை படமாக்குறேன் என்று சில கால கட்டத்தை மட்டும் எடுத்து சில un-official படங்கள் வந்துள்ளன.அது சிறு குவளையால் கடலை அள்ளுவது போன்ற முயற்சிதான்.

               ஒரு கலைஞரின் வாழ்வின் ஒரு பகுதியையோ அல்லது முழு வாழ்க்கையயுமே படமாக எடுக்கலாம்.இரண்டுமே மேற்சொன்ன குவளையால் கடலை அள்ளும் முயற்சிதான்.சம்மந்தப்பட்ட அந்த கலைஞனே தன் வரலாறாக ஒரு படம் எடுத்தாலும் அதிலும் factual errors இருக்கும்.
           இங்கு ஒரு இயக்குனரால் செய்ய முடிவது ஒரு கலைஞரின்  வாழ்க்கையை  ஒருவித outline ஆக  சுட்டிக்காட்டுதல்!ஏன் இப்படி செய்தார்?ஏன் அப்போது அந்த சிக்கலில் இருந்து வெளிவராமல் போனார்!ஏன் அப்படியொரு அபத்தமான முடிவை எடுத்தார்? என்று கேள்விகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்காமல் ஒரு வாழ்க்கையை பதிவு செய்தல்!மேலோட்டமாக இருந்தாலும்  ஆழமாக இருந்தாலும்   பார்வையாளனால் அந்த வாழ்க்கையோடு  தொடர்புபடுத்திக்கொள்ள முடிவதான ஒரு முயற்சியாக இருந்தால் அதுவே வெற்றிதான்!

         
            வணிகரீதியாக ஒரு நடிகையின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.அதுவும் வாழ்ந்து-வீழ்ந்த ஒரு நடிகை!ரொம்பவும் இருண்மையாக போய்விட கூடாது என்பதற்காக சமந்தா பகுதியையும் சேர்த்திருக்கிறார்கள்(தெலுங்கு ஸ்டைல்).அங்கே சாவித்திரி வீழ வீழ இங்கே சமந்தா கதாபாத்திரம்  திக்குவாய்-சமையல்பத்தி பத்திரிக்கையாளர் என்பதில் இருந்து சரளமாக பேசக்கூடிய- முதல் பக்கத்தில் பத்தி எழுதும்-முக்கிய பத்திரிக்கையாளராக உயர்வதும், தனது காதலை கண்டு கொண்டவராகவும் காட்டப்படுகிறார்.ஒருவித balancing act.
            இதில் பிரதானமாக இருப்பது சாவித்திரி-ஜெமினி காதல்.ஜெமினி மீதான அளவில்லா காதலால் ஏற்கெனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்துகொள்கிறார்.பிறகு சாவித்திரியின் வளர்ச்சி பொறுக்காமல் ஜெமினி பொறுமுவது,சில திரைப்படங்களை வாங்கி வெளியிடுவது தொடர்பான சாவித்திரியின் தவறான முடிவுகளை கண்டிப்பது என்று அக்கறை கொண்டவராக இருந்தாலும் ஒருகட்டத்தில் சாவித்திரியின் புகழ் தனது புகழைவிட மிக அதிக அளவில் போய்விட்டது அவரை கடுப்பேற்றுகிறது.

         வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை சாவித்திரி நேரில் கண்டு  கொதித்து போகிறார்.பிறகு அவர் தனித்து வாழ துவங்குகிறார்.மதுவுக்கு அடிமையாகிறார்,படங்கள் தயாரிக்கிறார் இயக்குகிறார் கடனாளி ஆகிறார்.நிற்க! இது இப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகள்  சார்ந்து நான் சொல்வது."இது பொய்!நிஜத்தில் அப்படியெல்லாம் இல்லை...what actually happened was... "என்று இஸ்திரி புத்தகத்தை எடுத்துகினு வர வேணாம்.
         
            படத்தில் பாராட்ட வேண்டிய விஷயங்கள் கண்டிப்பா இருக்கு.
இப்பட அறிவிப்பு வந்த சமயத்தில் 'சாவித்திரி கேரக்டர்ல கீர்த்தி சுரேஷா?' என்ற மாபெரும் சந்தேகம்/அதிர்ச்சி எனக்கும் இருந்தது.ஏற்கெனவே கீர்த்தியை ட்ரோல் செய்துகொண்டிருக்கும் இணைய மொண்ணைகளுக்கு இது இன்னும் பெரிய தீனியாக இருக்கும் என்றே நானும் நினைத்தேன்.
        படத்தின் முதல் பாதியில் சில இடங்களில் கீர்த்தியே தெரிந்தாலும் மீதுமுள்ள  படத்தில்  சாவித்திரியை திரையில் கண்ட உணர்வை தந்திருக்கிறார்.அதை மறுக்க முடியாது.கண்டிப்பாக அவரது நடிப்பை  பாராட்டலாம்.இதுபோன்ற இன்னொரு கதாபாத்திரம் அவருக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே!பட ஒளிப்பதிவாரின் மாபெரும்  பங்கையும் இதில் மறுக்க முடியாது.

          அப்புறம் எம்ஜிஆர்,சிவாஜி,சந்திரபாபு,நாகேஷ்-தங்கவேலு இவங்கல்லாம் எங்க?என்ற கேள்வியை சிலர் கேட்டிருக்கிறார்கள். இது ஜெமினி-சாவித்திரி உறவையும் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டதும் சாவித்திரியின் வீழ்ச்சியையும் பேசும் படம்.அப்போ இதில் முக்கியமானது ஜெமினி&சாவித்திரி  கேரக்டர்கள்தான்.ஜெமினி இவ்வளவு ஒல்லியாகவா இருந்தார் என்ற கேள்வி எழுது .அதேபோல ஹீரோவான ஜெமினியை வில்லனாக்கிவிட்டார்களா என்று கேட்கிறார்கள்.ஜெமினி ஒரு கேசனோவா என்பத்தைதாண்டி உண்மையில் ஜெமினி-சாவித்திரி இடையே  என்ன பிரச்சனை என்பதை அறிந்தோர் இதைப்பற்றி விளக்கம் அளித்தால் நன்று. இதை பெரிய விவாதம் ஆக்கி மண்டையை உடைத்துக்கொள்ள நான் தயாரில்லை!

           ஒருவேளை எம்ஜிஆர் சிவாஜி சந்திரபாபு  இவர்களையும் காட்டுறேன்னு ஏதாவது சிஜி/prosthetic அணிந்த நடிகர்களை வரிசையா திரையில் காட்டிக்கொண்டிருந்தால்   தசாவதாரம் பாத்த எபெக்டே மிஞ்சியிருக்கும்.தசா படம் பாத்துகினு இருந்தப்போ ஒவ்வொரு கமலாக prosthetic மாட்டிக்கொண்டு வந்துகொண்டே இருந்தபோது இது படமா?இல்ல மாறுவேட போட்டியா?என்ற கேள்வியே மிஞ்சியது.அந்த கோமாளித்தனத்தை இங்கே செய்யாதது நிம்மதி!
          சாவித்திரி கேரக்டருக்கு கூட இரண்டாம் பாதியில் சில இடங்களில்(எடை மிகவும் அதிகரித்த தருணங்களில்)  மட்டும் prosthetic பயன்படுத்தியுள்ளார்கள்.துல்கருக்கு லேசாக வீங்கிய ஈறுகள் மாதிரியான மேக்கப்பையும் காண முடியுது.அதிகமா பல்செட்டு, உப்பிய கன்னம், பெருத்த வயிறு  என்று போயிருந்தால் அது மாபெரும் திசைதிருப்பும் காரணியாக இருந்திருக்கும்(இந்த ஓவர் மேக்கப்பால் திசைதிருப்பப்படுதல் என்பதற்கு Hitchcock படத்தில் ஆந்தனி ஹாப்கின்ஸ் மேக்கப்பை குறிப்பிடலாம்).
            படத்தில் முக்கியமான குறையாக நான் பார்த்தது இதை தமிழ் தெலுங்கு என்று இருமொழிப்படமாக எடுக்காது போனதுதான்!அதனால் லிப் சின்க் பிரச்சனை இருக்கு;பிரதானமான சிலரை தவிர பிற நடிகர்கள் அன்னியமாக தெரிகிறார்கள்   .அப்புறம் அர்ஜுன் ரெட்டி பெற்ற மாபெரும் வெற்றியால் அப்பட ஜோடிக்கும் இதில் முக்கிய கதாபாத்திரங்களை கட்டாயமாக இடம் உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்.அப்புறம் இரு கதைகள் பேரலல்ஆக செல்வதால் படத்தின் நீளம் அதிகமானது.

       ரொம்ப படம் முழுக்கவுமே vintage மாதிரி தெரிந்துவிட கூடாது என்பதற்காக சமந்தா-அர்ஜுன் தேவரகொண்டா காட்சிகள் சேர்த்துள்ளார்கள் .பிரம்மானந்தத்தை வைத்து காமெடி காட்சி வைக்கிறேன்; ஐட்டம் டான்ஸ் வைக்கிறேன்(பாகுபலி நியாபகம் இருக்கா?) என்று எதுவும் செய்யாதது பெரிய ஆறுதல் .என்டிஆரை தேவுடா லெவல்லையே இதிலும் மெயின்டெயின் செய்துள்ளார்கள்.

        இது பிரதானமாக ஒரு தெலுங்குப்படம்.சாவித்திரி&கீர்த்தி சுரேஷ்  தமிழில் பிரபலமானவர்கள் என்பதால் இப்படத்தை டப்பிங் செய்துள்ளார்கள்.அப்படி இருக்கும்போது எம்ஜிஆர் ஏன் நாக்கை கடிக்கவில்லை சிவாஜி ஏன் உதட்டை கடிக்கவில்லை என்றெல்லாம் கேள்வி எழுப்புவது அபத்தமாகவே பார்க்கிறேன் ! இருமொழிகளில் அப்படத்தை எடுத்திருந்தா தமிழ் பதிப்பில் எங்கடா எம்சிஆரு?எங்கடா சிவாசி?என்று கேட்டிருக்கலாம்!
                           ஒலக விமர்சகர்கள் இப்படத்தை இடக்கையால் புறந்தள்ளிவிடுவர்.அவர்களோடு எவ்வித தொடர்பும் தவறியும் வைத்துக்கொள்ளாத சாமானிய ரசிகர்கள் தெலுங்கு வாடையை பொறுத்துக்கொண்டால்  இப்படத்தை ரசிக்க வாய்ப்புண்டு.அப்புறம் "தமிழன் ஜெமினியை வில்லனாக்கி தெலுங்கர் சாவித்திரியை அப்பாவியாக்கியுள்ளார்கள்" என்ற நாதக conspiracy ஐ கூட ஒலக விமர்சகர்கள் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.அவிங்களுக்கும் பொழுதுபோக வேணாமா?
.
டிஸ்கி: இப்படம் தமிழ்நாட்டில் குறைந்த தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் ஆகியிருக்கும் போல.ஒரு ஊர்ல நாலு தியேட்டர் இருந்தா அதுல மூணே முக்கா தியேட்டர்களில் விஷாலின் இரும்புத்திரை தொங்குது!மீதமுள்ள தியேட்டர்களில் இதை திரையிட்டுள்ளார்கள்.இப்படத்தை  தமிழக மக்கள் ஏற்பார்களா? என்ற வினியோகஸ்தர்களின் தயக்கமா?அல்லது விஷால் செய்த சேட்டையா?(பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தையும் காணோம்) என்பது தெரியல.எப்படி இருந்தாலும் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம்னு இரட்டை குதிரை சவாரி செய்யுறேன்னுட்டு ரெண்டுக்கும் விஷால் ஆப்படிக்க போவதாகவே எனக்கு தோணுது!

Thursday 3 May 2018

Stalker 1979

          ....if 300 people are in a cinema watching it, they will all see a different film, so in a way there are thousands of different versions of "Caché -Michael Haneke


                           சாதாரண வணிக சினிமாக்களுக்கு இது பொருந்தாது என்றாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட அணுகுமுறைகளை கோரும் திரைப்படங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும்.இப்படமும் அப்படியே!
              ஆன்மீகம் எனும் வார்த்தையே கேலி கிண்டலுக்கு மட்டுமல்லாது தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது ஆன்மீகத்தையும் பக்தியையும் போட்டு குழப்பும் சிலர் ஒருபுறம் இன்னொரு புறம் அரசியல் ஆசையில் சிலர் அதை கேலிகூத்தாக்குவது மறுபுறம்  என்று அவலம் தொடர்கிறது.
         ஒரு திரைப்படமோ புத்தகமோ  இசையோ ஓவியமோ அல்லது வேறு வகையான கலை படைப்போகூட  ஆன்மீக உணர்வைத்தரலாம்!
            அவ்வகையில் என்வரையில் ஆன்மீக உணர்வைத்தந்த சில திரைப்படங்கள்/டிவி தொடர்கள் என்றால் Spring,Summer,Fall,Winter,Twin Peaks, Solaris,Apocalypse Now என்று சிலவற்றை குறிப்பிடலாம்!அவ்வகையிலேயே இப்படத்தையும் சேர்க்கலாம்.
            இப்படம் புறம் சார்ந்தது என்பதைவிட அகம் சார்ந்த ஒரு பயணமாகவே நான் பார்த்தேன்.டர்கோவ்ஸ்கியின் படங்களில் காட்சிகள் மிக மெதுவாக நகரும் என்ற குற்றச்சாட்டு உண்டு.உண்மையில் எதிலும் வேகம் வேகம் என்று ட்யூன் செய்யப்பட்ட ஒரு பரபரப்பான மனநிலையின் ஓட்டத்தை குறைப்பதற்காகவே அத்தகைய காட்சிகள் என்பதை அவர் படத்தை சரியான நோக்கத்தில் அனுகியோர் உணர்வர்!மேலும் முந்தைய காட்சியின் பரிணாமங்கள்,அது உண்டாக்கிய ஆழ்மன  உணர்வு போன்றவற்றை அசைபோடுவதற்காகவும் இந்த நீண்ட மெதுவான காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டதாகவே காண்கிறேன்.

               அனைத்தையுமே கேள்விகளுக்கு உட்படுத்தி உட்படுத்தி எதன் மீதும் நம்பிக்கை இல்லாதோர் குறித்து பொருமுகிறான் ஸ்டாக்கர்.

               Zone எனும் பகுதியில் விண்கல் விழுந்ததாகவும்,அதன் பின்னர் அங்கிருந்த மக்கள் காணாமல் போனதாகவும் தகவல் பரவ அதைக்காண மக்கள் முண்டியடிக்க அவர்களும் ஆபத்தில் சிக்குகிறார்கள்.அரசு அப்பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாய் அறிவிக்கிறது.ராணுவ பாதுகாப்போடு!


          அதையும் மீறி அப்பகுதிக்கு மனிதர்களை அழைத்து செல்கிறான் ஸ்டாக்கர்.ஸ்டாக்கராக இருப்பவர் தனது சொந்த விருப்பத்திற்காக அங்கே செல்லக்கூடாது.நேர்வழியில் செல்ல முடியாது.கண்ணெதிரே தெரியும் இடத்திற்கும் சுற்றி வலைத்துதான் செல்லவேண்டும்.போன வழியில் திரும்ப வர முடியாது.அதற்கு வேறு வழியை கண்டுபிடித்து வர வேண்டும்.பழைய பொறிகள் மறைந்து புதிய பொறிகள் தோன்றும் ஸோன்!
           ஆனால் ஸோனில் ரூம் எனும் பகுதிக்கு செல்வோரின் ஆழமான விருப்பங்கள் நிறைவேறும்!இதிலும் ஒரு புள்ளி!என்னவெனில் ஒரு நபரின் ஆழ்மன விருப்பங்கள் இருவகைப்படும்.
-ப்ரக்ஞைபூர்வமான விருப்பங்கள்
-ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்கள்.
     ரூம் எனப்படும் பகுதியானது ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்களையே நிறைவேற்றக்கூடியது.நமக்கே ப்ரக்ஞைபூர்வமான விருப்பங்களாக நல்ல வீடு மனைவி மக்கள் பேர் புகழ் விருதுகள் என்று பல்வேறு விருப்பங்கள் உண்டு.

        ஆனால் ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்கள் என்னவென்று நமக்கே தெரியாது!"அவனை புரிஞ்சிக்கவே முடியல" என்று நாம் இன்னொருவனை பார்த்து சொல்கிறோம்.ஆனால் நாம் நம்மை எந்தளவு புரிந்துவைத்துள்ளோம்? என்ற கேள்விக்கு பலரால் பதிலே அளிக்க முடியாது.
           நம்மை நாமே முழுமையாக புரிந்துகொள்ள முடியாத நிலையில் ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்கள் குறித்த சிறு ஊகத்தையும் கூட நம்மால் செய்ய முடியாது என்பதே உண்மை!
          அறிவியல் விஞ்ஞானம் எல்லாம் உச்சகட்ட வளர்ச்சியை தொட்டுவிட்டதாக காலம் தோறும் சொல்லப்பட்டாலும் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு அவைகளாலும் எந்த உறுதியான பதிலையும் அளிக்க முடியவில்லை என்பதே உண்மை.
        படத்தில் மக்கள் வாழும் நகரம் என்பது அழுக்கடைந்து மாசுபடிந்து எந்திர இரைச்சலோடு இருப்பதாக காட்டப்படுகிறது.அதேநேரம்  ஸோன் பகுதியானது பச்சை பசேலென்று அமைதி தவழும் மனிதர்களால் வன்புணர்வு செய்யப்படாத ஒரு பகுதி போல காட்டப்படுகிறது.அதற்கு காரணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்!ஸோன் தவிர்த்த பிற பகுதிகள் மனிதனின் அராஜகத்திற்கு எதிர்வினை ஆற்றும் வல்லமை இல்லாதவை!ஆனால் ஸோன் என்பது அப்படியல்ல!அதன் விதிகளுக்கே மனிதன் கட்டுப்பட்டாக வேண்டும்.

          ஸோன் பகுதியிலும் கூட மனித அராஜகத்தின் சின்னமான பீரங்கிகள் துப்பாக்கிகள் போன்றவை ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகின்றன.ஸோன் என்பது உருவாவதற்கு இருபதாண்டுகளுக்கு முன் வரை அங்கு மனிதன் உண்டாக்கிய சேதாரங்கள்  அப்படியே இருக்கின்றன.
             இங்கே படத்திலும் ஒரு ப்ரொபசர்  ஒரு எழுத்தாளர் இருவரும் ஸ்டாக்கரோடு ஸோனுக்குள் செல்கிறார்கள்.எழுத்தாளன் ப்ரொபசர் இருவருமே ஸோன் பகுதியை அலட்சியமாகவே அணுகுகிறார்கள்.ஸோனின் சில பகுதிகள் மதிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாக்கர் சொல்வதை அவர்கள் கேட்பதில்லை.
             இந்த ஸ்டாக்கருக்கு (இங்கே ஸ்டாக்கர் என்பது பெயரல்ல!சட்ட விரோதமான செயலுக்கு உதவுவோரை குறிக்கும் ஒரு பணி) முன்னர் ஒருவன் ஸ்டாக்கராக(Porcupine என்று அழைக்கப்படுகிறான்) இருந்திருக்கிறான்.தனது சகோதரனை ஸோனுக்கு அழைத்து சென்றபோது சகோதரன் இறந்துவிட இவன் ரூமுக்குள் செல்கிறான்.
         எந்த எண்ணத்தோடு?தனது சகோதரன் மீண்டும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற ஆழ்மன எண்ணத்துடன்!ஆனால் அவன் ஸோனில் இருந்து திரும்பியதும் நடப்பது வேறு.பெரும் பணக்காரன் ஆகிறான்.

         ஏற்கெனவே சொன்னது போல ரூம் என்பது ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பங்களை மட்டுமே நிறைவேற்றக்கூடியது.அதுவும் நேர்மறையான விருப்பமாக இருந்தால் மட்டுமே!உலக அழிவை ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பமாக கொண்ட ஒருவன் ரூமுக்குள் சென்றால் அவனின் அழிவுக்கே அது இட்டுசெல்லும்.
        Porcupine ன் ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பம் என்பது பெரும்  செல்வந்தனாவது!ஆனால் அவன் ப்ரக்ஞைபூர்வமாக விருப்பப்பட்டதோ தனது சகோதரனின் உயிர்! சகோதரன் மீதான தனது பாசம்/அக்கறை என்பது மேலோட்டமான போலித்தன்மை கொண்டதே என்ற உண்மையை அவன் உணர்ந்ததும் அந்த குற்ற உணர்ச்சி தாளாமல் தற்கொலை செய்துகொள்கிறான்.
            எனவே ஸோன் என்பதும் ரூம் என்பதும் எவ்வகையிலும் விளையாட்டுத்தனமாக  அணுகிவிடமுடியாத ஒரு பகுதி.

              ப்ரொபசரின் விருப்பம் என்பது ஸோன் குறித்த ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி நோபல் பரிசு பெறுவது.அதேநேரம் அந்த ரூம் எனப்படும் பகுதி இங்கே வரும் மனிதர்களால் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற கவலையையும் அவர் கொண்டுள்ளான்.அதற்காக தனது பையில் சிறு அணுகுண்டு எடுத்து வந்துள்ளான்.ரூமை நிரந்தரமாக அழிக்க.அவரை பொறுத்தளவில் ஸோன் என்பது ஒரு ஆராய்ச்சிக்கான ஒரு இடம்.அதன் மர்ம பகுதிகள் பற்றியெல்லாம் அவர் காதில் போட்டுக்கொள்வதில்லை.
               எழுத்தாளனோ பேசிக்கொண்டே இருக்கிறான் .அவனுக்கு எதன் மீதும் நம்பிக்கை இல்லை.A cynic to the core!தொடர்ந்து எழுது எழுது என்று ஊடகங்கள் விமர்சகர்கள் நிர்பந்திப்பதாக புலம்புகிறான்.ஒரு ரத்த கட்டியை பிதுக்கி எடுப்பது போன்றதே தான் எழுதும் எழுத்து என்கிறான்.ஸோனுக்கு அவன் வந்தது கூட ஒருவித உத்வேகத்தை அது கொடுக்கும் என்ற கடைசி நம்பிக்கையில்தான்!இந்த ஸோன் என்ற மிக புதிரான பகுதி கூட அவனுக்கு எவ்வித ஆர்வத்தையோ நம்பிக்கையையோ எழுதுவதற்கான உத்வேகத்தையோ  ஏற்படுத்தவில்லை.இனிமேல் எந்த ஆதாரத்தில் தான் எழுதப்போகிறோம் என்று அழுகிறான்


          ஆனால் தவறான ப்ரக்ஞையற்ற நிலையிலான விருப்பத்தோடு ரூமுக்குள் நுழைவோர் அழிவையே சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து அந்த குண்டை டிஃப்யூஸ் செய்து தண்ணீரில்  எறிகிறான்.
          எழுத்தாளன் ப்ரொபசர் இருவருமே ரூமுக்குள் நுழைய தயங்குகிறார்கள்.Porkupine கதையை கேட்டபிறகு தங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள் எத்தகையதாக இருக்கக்கூடும் என்ற தயக்கமோ அல்லது தனக்கே தெரியாமல் தவறான ஆழ்மன விருப்பத்தோடு உள்ளே சென்றால் தனக்கே அழிவு என்ற பயம் காரணமோ!
            இங்கே வரும் கதாபாத்திரங்கள் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை.அவரவர் தொழில் சார்ந்த பெயர்களாலேயே அழைக்கப்படுகிறார்கள்.உலகில் மனிதர்கள் எடை போடப்படுவது குணம் சார்ந்து அன்றி  அவரவர் தொழில்/பணி சார்ந்தே என்பதை நாம் மறுக்க முடியாது!
     ஸ்டாக்கரின் நோக்கம் என்பது தன்னலமற்றது.தனக்கான சொந்த விருப்பத்தோடு  ஒரு ஸ்டாக்கர் ரூமுக்குள் நுழைய முடியாது என்ற வரைமுறையால் அது வந்ததல்ல!அவன் இயல்பிலேயே அவ்வாறு நல்ல மனம் கொண்டவனாக இருக்கிறான்.அர்த்தமற்ற நகர வாழ்க்கைக்கு முரணாய் அர்த்தமுள்ள ஒரு பயணமாகவே ஸோனுக்கு செல்லும் பயணத்தை அவன் கருத்துகிறான்.வாழ்வில் ஒரே பிடிப்பாக அப்பயணம் இருப்பதாய் கூட சொல்லலாம்!

       அகத்திலிருந்து புறம் வரை வெறுமையைக்கொண்டவர்களை இங்கே வழிநடத்தி அழைத்து வருவதிலேயே மன நிறைவைக்கொண்டவனாக இருக்கிறான்.'இங்கே அழைத்து வந்து திரும்ப அவர்களை ஊருக்குள் விட்டதும் அவர்கள் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்பது தெரியாது' என்கிறான்.ஆக அவர்களிடம் எந்தவித பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவில்லை.அவன் மிக மிக வறுமையான நிலையில்தான் இருக்கிறான்.ஸோன் உடன் ஒருவித உளவியல் ரீதியான பிணைப்பை கொண்டவனாகவே நாம் ஸ்க்கரை காண முடிகிறது!இதை வார்த்தைகளில் விளக்க முடியவில்லை!
         படத்துவக்கத்தில் ஸ்டாக்கரின் மனைவி அழுது புலம்பி அவனை ஸோனுக்கு போக வேண்டாம் என்கிறாள்.ஏற்கெனவே ஸோனுக்கு போனதற்காக சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தவன் அவன்.எனக்கு எங்குமே சிறையில் இருப்பது போலத்தான் என்று சொல்லி அவள் பேச்சை கேட்காமல்  செல்கிறான்.பட முடிவில் தான் ஸோனுக்கு செல்ல விரும்புவதாக அவள் தெரிவித்ததும் "உனது ஆசைகள் நிறைவேறாது" என்கிறான் ஸ்டாக்கர்.
                மிக களைப்பாக இருப்பதாக சொல்வதுடன் மனிதர்கள் அனைத்தின் மீதான நம்பிக்கையையும் இழந்து விட்டதாக புலம்புகிறான்.
                      ஸ்டாக்கர் ஸோனுக்கு அடிக்கடி சென்று வந்ததாலேயே அவர்களின் பெண் குழந்தைக்கு கால்களே இல்லை என்ற பேச்சும் ஊருக்குள் உலவுகிறது.அவளும் வாக்கிங் ஸ்டிக் வைத்துதான் நடக்கிறாள்.ஆனால் பார்வையிலேயே பொருட்களை நகர்த்தும் திறன் அவளிடம் உள்ளதாக படம் நிறைவடைகிறது.

             படம் நெடுகவுமே பலவேறு ஆழமான கருத்துக்களை ஆன்மீக  சிந்தனைகளை காண முடிகிறது.மனிதன் பிறக்கும் போது வலுவற்று நெகிழ்வுத்தனமையோடு இருக்கிறான்.வளர வளர இறுக்கமும் நெகிழ்வற்ற தன்மையும் நிறைந்து இறுகிப்போய் சாகிறான்!
           ஹாலிவுட் ஆக்ஷன் படங்களையே பார்த்து பழக்கப்பட்ட ஒரு நபர் இப்படத்தை பார்க்கும்போது "இவ்வளவு சஸ்பென்சாக நகருதே!திடீர்னு ஏதாவது மனிதனை விட ஆயிரம் மடங்கு பெரிதான ஒரு ஜந்து தரை அதிர வரும் என்றோ திடீரென்று கொழ கொழவென்று ஏலியன்கள் வானத்தில் இருந்து குதிக்கப்போகிறார்கள் என்றோ கண்டிப்பாக எதிர்பார்ப்பார்கள்.அவர்களுக்கான படமல்ல இது!
       அடுத்து என்ன ?அடுத்து என்ன? என்று இந்த தருணத்தை மதிக்காமல்   எதிர்பார்க்க வைக்கும் படமல்ல இது!இந்நொடியை  இத்தருணத்தை முழுமையாக எதிர்கொண்டு உள்வாங்க சொல்லும் ஒரு படமே இது !